செய்திகள்

போடி அருகே ராணுவ வீரர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

Published On 2017-11-22 11:09 GMT   |   Update On 2017-11-22 11:09 GMT
போடியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
தேனி:

போடி நந்தவனத் தெருவைச் சேர்ந்தவர் அன்ன காமாட்சி. இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு அவரது வீட்டுக்குள் புகுந்தனர்.

வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 50 பவுன் தங்க நகைகள், விலை உயர்ந்த கேமரா, ஏ.டி.எம். கார்டு மற்றும் சில ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.

இன்று அதிகாலை அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வெளியூரில் இருந்த அன்னகாமாட்சிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அதே தெருவில் உள்ள காளியம்மன் கோவிலிலும் கொள்ளையர்கள் புகுந்தனர். அங்கிருந்த உண்டியலை உடைக்க முயன்ற போது அது முடியாமல் போகவே உண்டியலை பெயர்த்து எடுத்துச் சென்றனர். அந்த உண்டியலில் ரூ.20 ஆயிரம் பணம் இருக்கும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

போடியில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News