செய்திகள்

கோவை தனியார் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2017-11-14 08:24 GMT   |   Update On 2017-11-14 08:24 GMT
கோவை தனியார் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவன் பலியானார். இதனால் கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
அன்னூர்:

கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கடந்த 4½ மாதத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 63 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 17 பேரும் பலியாகி உள்ளனர்.

மாவட்டத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மூக்கனூரை சேர்ந்தவர் குணசேகரன்.நெசவுத் தொழிலாளி. இவரது மகன் சுதர்சன் (வயது 14). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக சுதர்சன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனையடுத்து சுதர்சனை அவரது பெற்றோர் அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சுதர்சனின் ரத்த மாதிரியை சோதனை செய்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சுதர்சன் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதனால் கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டெங்கு காய்ச்சலுக்கு 33 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 145 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News