திண்டுக்கல் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவி பலி
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள கொத்தம்பட்டியைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் மைதிலி (வயது 14). திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் உயிரிழப்பு சம்பவங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மெட்டூரைச் சேர்ந்த 2 பள்ளி மாணவிகள் உயிரிழந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்த உயிரிழப்பு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்து வருகின்றனர்.