செய்திகள்

குன்னம் அருகே மின் தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

Published On 2017-10-21 13:58 GMT   |   Update On 2017-10-21 13:58 GMT
குன்னம் அருகே மின் தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் கடந்த 3 நாட்களாக சரியாக மின்சாரம் வழங்கவில்லை.

மின்தடையால் தீபாவளி பண்டிகையை கூட இரவு நேரத்தில் இருட்டில் கொண்டாட வேண்டிய சூழ்நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்தடையை கண்டித்து ஓலைப்பாடியில் வேப்பூர்-திட்டக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, அந்த கிராமத்திற்கு புதிய மின்மாற்றி இன்னும் ஒரு வாரத்தில் புதிதாக அமைத்து மின்சார பிரச்சினை சரி செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் திட்டக்குடி- வேப்பூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News