வில்லியனூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே மேல்சாத்தமங்கலம் மேட்டு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 31). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ரேவதி. இவர் தனியார் பள்ளி ஒன்றில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று காலை கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.
மாலையில் பணி முடிந்து ரேவதி வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 2½ பவுன் நகையை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு செல்வதை நோட்டமிட்டு கதவை உடைத்து நகையை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும்.
இதுகுறித்து செந்தில் குமார் மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.