செய்திகள்

கொருக்குப்பேட்டையில் கஞ்சா கொடுக்க மறுத்த வாலிபர் குத்திக்கொலை: 2 பேர் கைது

Published On 2017-10-19 12:45 GMT   |   Update On 2017-10-19 12:45 GMT
கொருக்குப்பேட்டையில் கஞ்சா கொடுக்க மறுத்த வாலிபரை குத்திக்கொலை செய்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
ராயபுரம்:

கொருக்குப்பேட்டை சுதந்திரபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது 28). கூலித்தொழிலாளி. நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் அதே பகுதி அம்பேத்கார் நகர், சி.பி. ரோட்டில் அந்தோணி ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அவரது முதுகு, வயிற்றில் பலத்த கத்திகுத்து காயங்கள் இருந்தன.

ஆர்.கே.நகர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது கொடுங்கையூர், எழில் நகர் ‘பி’ பிளாக்கை சேர்ந்த சந்தோஷ், ஜம்புலி நகரை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் அந்தோணியை குத்தி கொன்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

சம்பவத்தன்று சந்தோஷ், கார்த்திக் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளனர். அப்போது அவ்வழியே கொலையுண்ட அந்தோணி வந்தார். அவரிடம் சந்தோஷ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் கஞ்சா கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

அந்தோணி கஞ்சா கொடுக்க மறுத்ததால் அவரை கொன்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அந்தோணிக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அந்தோணியுடன் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி, குழந்தைகளுடன் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.

கைதான சந்தோஷ், கார்த்திக் மீது வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான குற்றவழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டை யார்பேட்டை பகுதிகளில் கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை தாராளமாக நடக்கிறது. இந்த தகராறில் ரவுடிகளிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

போதை மாத்திரைகள் வட மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் கடத்தி வரப்படுவதாக தெரிகிறது. கஞ்சா, போதை மாத்திரை கலாச்சாரத்தை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News