அரசின் செயல்பாடுகளுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக உள்ளார்: புதுவை அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை காங்கிரஸ் ஆட்சியின் மீது குறை கூறும் நோக்கத்தில் கவர்னர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் கடந்த ஏப்ரல் மாதம் முதலே கொசு மருந்து அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்குவை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது.
புதுவை மாநில வளர்ச்சிக்கு போராடி கவர்னர் ஒத்துழைப்பு தருவார் என்று காத்து இருந்தோம். ஆனால், அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அரசின் செயல்பாடுகளுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக உள்ளார்.
இதனால் குறிப்பிட்ட காலத்தில் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. விவசாய கடன் தள்ளுபடி, இலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவர் ஒப்புதல் வழங்கவில்லை.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், கவர்னர் தடையாக உள்ளார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான வழியில் போராடி வருகிறோம்.
கவர்னரின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளோம். அவர்கள் உரிய நேரத்தில் இப்பிரச்சினையில் தலையிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.