செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே 3 கடைகளில் பணம் கொள்ளை

Published On 2017-10-06 14:16 GMT   |   Update On 2017-10-06 14:16 GMT
திருத்துறைப்பூண்டி அருகே மூன்று கடைகளில் பணம் கொள்ளையடித்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே மணலி கிராமத்தில் அடுத்தடுத்து மளிகை கடை உட்பட பல கடைகள் உள்ளன. நேற்று இரவு 1.30 மணியளவில் 2 மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் அப்பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அங்குள்ள கடைகளை நோட்டமிட்ட அவர்கள் 3 கடைகளில் கொள்ளையடிக்க முடிவு செய்து அக்கடைகளின் பூட்டை உடைத்துள்ளனர்.

இதில் சத்தம் ஏற்படவே அக்கம் பக்கத்தினர் எழுந்து வந்து பார்த்துள்ளனர். இதைக்கண்ட அவர்கள் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பூட்டு உடைக்கப்பட்ட கடை உரிமையாளர்களான முகமது ஜலால், கார்த்தி, முருகவேல் ஆகியோர் திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் முருகவேல் என்பவரது மளிகை கடையில் இருந்து ரூ.5000 மற்றும் லேப்-டாப் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி தப்பியோடியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News