ரெட்டியார்பாளையம் அருகே என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
புதுச்சேரி, செப். 27-
ரெட்டியார் பாளையம் அருகே மூலகுளம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 57). இவர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் பாலமுருகன் (27). என்ஜினீயரிங் படித்து வந்த இவர் அரியர்ஸ் வைத்திருந்தார்.
இதற்கிடையே பிரெஞ்சு படித்து தேர்ச்சி பெற்ற இவர், பிரான்சுக்கு செல்ல விரும்பினார். ஆனால், அதில் இளங்கோவனுக்கு விருப்பம் இல்லை. அரியர்சை முடித்து விட்டு பிரான்சுக்கு சென்றால் வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கும். எனவே, அரியர்சை முடித்து விட்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதனால் பாலமுருகன் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் பாலமுருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷத்தை குடித்து விட்டார். இதில், மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பாலமுருகன் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.