சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அங்கபிரதட்சண வழிபாடு
திருச்சி:
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தினமும் காலை நேரத்தில் கிழக்கு நுழைவு வாயிலில் கொடிமரம் முன் பகுதியிலிருந்து அங்கப்பிரதட்சணம் செய்வது வழக்கம். கடந்த 2010-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு பிரகாரங்கள் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்ற காரணத்தால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அங்கப்பிரதட்சணம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பிரகாரம் விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் நலன் கருதியும், நேற்று முதல் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தினமும் காலை 5.30 மணி முதல் 9 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் கிழக்கு ராஜகோபுர நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்று கொடிமரம் முன்பு தொடங்கி தெற்கு, மேற்கு, வடக்கு பிரகாரம் வழியாக வந்து மீண்டும் கிழக்கு பிரகாரம் கொடிமரம் முன்பு முடித்துக்கொள்ள வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து காலை 5.45 மணிக்கு பக்தர்கள் பயபக்தியுடன் அங்கப்பிரதட்சணம் செய்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.