செய்திகள்

பாகூர் அருகே திடீர் தீவிபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பல்

Published On 2017-09-22 13:34 GMT   |   Update On 2017-09-22 13:34 GMT
பாகூர் அருகே இன்று காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பலானது.

பாகூர்:

பாகூர் அருகே மேல்பரிக்கல்பட்டு குளத்து தெருவை சேர்ந்தவர் ரவி, கூலித்தொழிலாளி. இன்று காலை இவரும், இவரது மனைவி அருள்மொழியும் தங்களது கூரை வீட்டை பூட்டிவிட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டனர். காலை 10-45 மணியளவில் மின்கசிவு காரணமாக ரவியின் கூரைவிடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் யாரும் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் தீ அருகில் இருந்த கண்ணன், ஜெயமூர்த்தி ஆகியோரது வீடுகளில் பரவி எரிந்தது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து பாகூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு படையினர் தாமதமாகவே சென்று மேலும் தீபரவாமல் அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் 3 வீடுகள் முற்றிலும் எரிந்து தரைமட்டமானது. வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தால் மாற்றுஉடை கூட இல்லாததால் குடும்பத்தினர் பார்த்து கதறி அழுதனர். இதனால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது.

இந்த தீவிபத்து குறித்து பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகணேஷ் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பாகூர் தாசில்தார் கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News