செய்திகள்

மத்தூர் பகுதிகளில் போலி டாக்டர்கள் அதிகரிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Published On 2017-09-20 16:08 GMT   |   Update On 2017-09-20 16:08 GMT
மத்தூர் பகுதிகளில் போலி டாக்டர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மத்தூர், கல்லாவி, அனுமந்தீர்த்தம், காரப்பட்டு, குன்னத்தூர், சாமல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலி டாக்டர்கள் அதிக அளவில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த பகுதிகளில் கிளினீக் வைத்து நடத்தி வருவதாகவும், மேலும் அவர்கள் சித்த மருத்துவம் படித்து விட்டு இங்கு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வருவதாகவும் கூறுகின்றனர்.

மத்தூர், கல்லாவி, சாமல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருபவர்கள் பெரும்பாலானோர் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் ஆவர்.

இந்த நிலையில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சலால் இந்த ஏழை, எளிய தொழிலாளர்கள், விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும், சளி, தலைவலி, கை, கால் வலி, மூட்டுவலி உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டும் வருகிறன்றனர்.

இதனால் அவர்கள் சிகிச்சை பெற வேண்டி மத்தூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையை நாடுகிறார்கள். ஆனால் அங்கு டாக்டர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் போதிய சிகிச்சை பெற முடியாமல் போய் விடுகிறது.

இதனால் அவர்கள் தனியார் மருத்துவமனையை நாடுவதால் அங்கு ஒரு முறை மருத்துவம் பார்க்க ரூ.1000 முதல் ரூ.1500 வரை செலவு செய்கிறார்கள். இதில் பணம் செலவு செய்ய வசதி இல்லாதவர்கள் ஊத்தங்கரை அருகே உள்ள மத்தூர், சாமல்பட்டி, கல்லாவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலி டாக்டர்களை நாடி விடுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் கிருஷ்ணகிரி இணை இயக்குநர் நலப்பணிகள் மற்றும் சுகாதார துறை தலையிட்டு அரசு மருத்துவமனைகளில் அரசு அனுமதித்துள்ள போதிய டாக்டர்களை நியமிக்கவும், போலி டாக்டர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News