செய்திகள்

தொப்பூரில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதல் - 2 பேர் பலி

Published On 2017-09-18 11:42 GMT   |   Update On 2017-09-18 11:42 GMT
தொப்பூரில் இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதி டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தர்மபுரி:

சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி இன்று அதிகாலை ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை கருப்பூர், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 26) என்பவர் ஓட்டிச் சென்றார்.

அதிகாலை 5 மணியளவில் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கட்டமேடு பகுதியில் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரோட்டோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் டிரைவர் அருண்குமார் மற்றும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். விபத்தில் இறந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. சம்பவம் பற்றி அறிந்ததும் தொப்பூர் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 2 பேர் உடல்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

அதிகாலை நேரம் என்பதால் டிரைவர் கண் அசந்ததாக கூறப்படுகிறது. இதனால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் தொப்பூரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News