சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: 2 பேர் கைது
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள குலசேகரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ஆனந்த் (வயது20). கல்லூரி மாணவர். இவர் பஸ்சில் கல்லூரிக்கு சென்று வரும் போது நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த சிலருடன் ஏற்பட்ட பிரச்சினை முன்விரோதமாக மாறி உள்ளது.
சம்பவத்தன்று ஆனந்த் கல்லூரிக்கு சென்று விட்டு பொய்கைமேடு பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கி உள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், பார்த்திபன், குவின்ராஜ் மற்றும் கனகராஜ் ஆகியோர் சேர்ந்து தகராறு செய்துள்ளனர்.
தகராறு முற்றவே அவர்கள் அனைவரும் சேர்ந்து ஆனந்தை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சதீஷ்குமார், பார்த்திபனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.