செய்திகள்

மன்னார்குடி அருகே டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ. 1½ லட்சம் பணம் பறிப்பு

Published On 2017-08-22 16:28 GMT   |   Update On 2017-08-22 16:28 GMT
முகவரி கேட்பது போல் நடித்து டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ. 1½ லட்சத்தை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.
மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அசேசம் சஞ்சீவி நகரை சேர்ந்தவர் லக்குமணன் (47). இவர் பெருகவாழ்ந்தானில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு வசூலான ரூ. 1 லட்சத்து 57 ஆயிரத்தை பையில் வைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். வீட்டின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2பேர் வந்தனர். அவர்கள் டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் முகவரி கேட்பது போல் நடித்தனர்.

பின்னர் தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் லக்குமணன் தலையில் சரமாரி வெட்டினார்கள். இதில் அவர் நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம ஆசாமிகள் லக்குமணன் பையில் வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 57 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

காயம் அடைந்த அவர் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து மன்னார்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. அசோகன் விசாரணை நடத்தினார். இன்ஸ்பெக்டர் கழனியப்பன் வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த 2 பேரை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News