செய்திகள்

கும்பகோணம் அருகே பெண் அடித்து கொலை: கணவருக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2017-08-22 11:49 GMT   |   Update On 2017-08-22 11:49 GMT
கும்பகோணம் அருகே மனைவியை கணவன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்டீஸ்வரம்:

கும்பகோணத்தை அடுத்த நாதன் கோவில் புதுக்காலனித் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது 50). இவரது மனைவி சவுந்தரவள்ளி (45). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். கணவன் - மனைவி இருவருமே செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வேலையை முடித்து விட்டு கணவன்-மனைவி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மோகன், சவுந்தரவள்ளியிடம் சாப்பாடு வைத்து தருமாறு கூறியுள்ளார். இதற்கு அவர் வைத்து கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மோகன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீட்டில் இருந்த மண்வெட்டி கட்டையால் சவுந்தரவள்ளியை தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தரவள்ளி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பட்டீஸ்வரம் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கணவன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News