உருளையன்பேட்டையில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை சுப்பையா நகரை சேர்ந்தவர் கதிர்வேலு. இவரது மகன் வைத்தியநாதன் (வயது35). நகை செய்யும் தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் தனியார் நிறுவனத்தில் அவர் வேலைபார்த்து வந்தார். ஆனால் இந்த வேலையில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. தான் கற்ற வேலையான நகை செய்யும் தொழிலையே விரும்பினார். இதற்காக பல இடங்களில் சென்று கேட்டு பார்த்தார். வேலை கிடைக்கவில்லை. இதற்கிடையே வைத்தியநாதனுக்கு திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சரியான வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்த வைத்தியநாதன் நேற்று மாலை வீட்டின் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கொண்டு சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். வெகுநேரமாக அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த வைத்தியநாதன் மற்றும் இவரது மற்றொரு மகன் பாலமுருகன் ஆகியோர் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வைத்தியநாதன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து பாலமுருகன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.