தனியார் பஸ் மோதல்: தாயுடன் மொபட்டில் சென்ற பள்ளி மாணவர் பரிதாப பலி
கோவை:
கோவை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நவ்பல். தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் நிஷார் (7) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் நிஷாரை அவனது தாயார் கிரேஸ் தனது மொபட்டில் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார்.
திருச்சி ரோட்டில் கள்ளிமடை சாலை சந்திப்பு பகுதியில் சென்ற போது அவ்வழியாக சென்ற தனியார் பள்ளி பஸ் இவர்களது மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த நிஷார் கீழே விழுந்தார்.
அப்போது தனியார் பள்ளி பஸ் அவர் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தனியார் பள்ளி பஸ் டிரைவரான சூலூர் பட்டணத்தை சேர்ந்த மகேஷ்குமார்(33) என்பவர் மீது போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.