செய்திகள்

தினகரன் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய நேரம் வரும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2017-08-15 09:11 GMT   |   Update On 2017-08-15 09:11 GMT
அதிமுகவில், சசிகலா, தினகரன் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய நேரம் வரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை:

மதுரை மேலூரில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கூட்டம் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தால் அதிமுகவில் குழப்பமான சூழ்நிலை நீடித்துள்ளது.

இந்நிலையில், அதிமுகவில், சசிகலா, தினகரன் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய நேரம் வரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’மாநில தேவைகளுக்காக மத்திய அரசோடு இணக்கமாக செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. பழனிசாமி முதலமைச்சராக இருக்கிறார் என்றால், அதற்கு சசிகலா தான் காரணம்’ என்றார்.

முன்னதாக மேலூர் கூட்டத்தில் பேசிய தினகரன், ’தபதவிக்கு ஆசைப்படுபவர்கள் நாங்கள் அல்ல என்பதை புரியாத மூடர்கள், எங்களை எதிர்த்து வருகின்றனர். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என அவர்கள் நினைக்கின்றனர். 30 பேர் சேர்ந்து கொண்டு தலைமை செயலகத்தில் உட்கார்ந்து எங்களை வீழ்த்திவிட முடியாது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளவிருந்த 3 எம்.எல்.ஏக்களை கடத்திச் சென்றுள்ளனர். எம்.ஜி.ஆருக்காக கொண்டாடப்படும் நூற்றாண்டு விழாவில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை ஒளித்து வைத்துள்ளவர்கள் விரைவில் ஒழிந்து போவார்கள்’ என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். 
Tags:    

Similar News