செய்திகள்
சாயல்குடியில் டாஸ்மாக் ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
சாயல்குடி அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சாயல்குடி:
சாயல்குடி மாணிக்கம் நகரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சிக்கல் பகுதியை சேர்ந்த காசிநாதன் (வயது 40) என்பவர் விற்பனையாளராக உள்ளார். நேற்று இரவு வேலையை முடித்து விட்டு காசிநாதன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
கடையில் இருந்து சென்ற சிறிது தூரத்தில் 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். அவர்கள் டாஸ்மாக் வசூல் பணத்தை கொடு என்று மிரட்டினர். ஆனால் காசிநாதன் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் காசிநாதனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகிறார்.