செய்திகள்
திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த பேராசிரியர் ஜெயராமன் மற்றும் பொதுமக்களை படத்தில் காணலாம்.

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் சிறையிலிருந்து விடுதலை

Published On 2017-08-12 04:43 GMT   |   Update On 2017-08-12 04:43 GMT
திருச்சி சிறையில் இருந்து 43 நாட்களுக்கு பிறகு கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் இன்று விடுதலையாகினர்.
திருச்சி:

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க குழாய்கள் பதிப்பதினால் விவசாய நிலங்கள் பாதித்து, குடிநீர் ஆதாரம் பாதிப்பதாக கூறி இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் தடியடியில் முடிந்தது. இதில் 3 போலீசார் காயமடைந்தனர்.

இதை தொடர்ந்து தஞ்சை போலீசார் கிராமமக்கள் போராட்டத்தை தூண்டி விட்டதாக அப்பகுதி பேராசிரியர் ஜெயராமன், தர்மராஜன், ரமேஷ் உள்பட 10 பேரை கைது செய்தனர். இவர்கள் 10 பேரும் கடந்த 1.7.2017 முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி சிறையில் இருந்து தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேரை ஜாமீனில் விடுவிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்டு பேராசிரியர் ஜெயராமனோடு கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட தர்மராஜன், ரமேஷ் ஆகியோர் ஜாமீன் கேட்டு தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இவர்களுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 43 நாட்களாக அடைக்கப்பட்டிருந்த பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரும் இன்று காலை 8 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

விடுதலையான 10 பேரையும் அப்பகுதி பிரமுகர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். இது தொடர்பாக பேராசிரியர் ஜெயராமன் கூறும்போது :-

கதிராமங்கலத்தில் அமைதியான முறையில் நியாயம் கேட்டு போராடிய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலவரமாக்கினர். இந்த சம்பவத்தில் கதிராமங்கலம் கிராம குடிநீரை நஞ்சாக மாற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், இதை தடுக்க தவறிய அதிகாரிகளும், தடியடி நடத்திய போலீசாரும் தான் குற்றவாளிகள்.

எங்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News