செய்திகள்

சசிகலா, டி.டி.வி. தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் - விசாரணை தள்ளிவைப்பு

Published On 2017-08-04 03:44 GMT   |   Update On 2017-08-04 03:44 GMT
சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடந்துவந்த சசிகலா, டி.டி.வி. தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
சென்னை:

சென்னை எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில், டி.டி.வி.தினகரன் மீது இரண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் விசாரணையில் உள்ளது. அமலாக்கப்பிரிவு தொடர்ந்துள்ள இந்த வழக்குகளை மாஜிஸ்திரேட்டு மலர்மதி விசாரித்து வருகிறார். நேற்று இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பார்ப்பதற்கு டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீல்கள் அனுமதி கேட்டனர். மாஜிஸ்திரேட்டு மலர்மதி அனுமதி வழங்கினார். அதன்பேரில், வழக்கு தொடர்பான ஆவணங்களை டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீல்கள் பார்வையிட்டனர்.

பின்னர் இருவழக்குகளில் ஒரு வழக்கை 10-ந்தேதிக்கும், இன்னொரு வழக்கை 21-ந்தேதிக்கும் விசாரணைக்காக மாஜிஸ்திரேட்டு மலர்மதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

சசிகலா, அவரது அக்காள் மகன் பாஸ்கரன் ஆகியோர் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ஜாகீர்உசேன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சிகள் விசாரணைக்கு ஆஜராகாததால், விசாரணை 17-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Tags:    

Similar News