செய்திகள்

ஆம்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி

Published On 2017-07-29 14:15 GMT   |   Update On 2017-07-29 14:15 GMT
ஆம்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
ஆம்பூர்

ஆம்பூர் அடுத்த மின்னூர், எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 30). பெங்களூரில் வெல்டிங்  பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பரணி (29). இவர்களுக்கு ரோகித் என்ற 2 வயதில் ஆண் குழந்தை இருந்தது.

விடுமுறையில் வீட்டிற்கு வந்த மேகநாதன், எருக்கம்பட்டு அருகே உள்ள தனது மாமியார் வீட்டிற்கு,  தனது மனைவி, குழந்தை ரோகித் உடன் நேற்று மாலை சென்றார். அப்போது, வீட்டின் வெளியே உள்ள தண்ணீர் தொட்டி அருகே ரோகித் விளையாடிக் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

அப்போது, வெளியே வந்த தாய் பரணி, குழந்தை உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து கூச்சலிட்டார். அவரின் சத்தத்தை கேட்டு வெளியே ஓடி வந்த மேகநாதன் குழந்தையை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரோகித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், குழந்தையுடன் வெளியே அமரும்படி தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து, அங்கு வந்த உறவினர்கள் இங்கு அமர்ந்து இருந்தால், பிரேத பரிசோதனை செய்த பின்னரே குழந்தையின் உடலை ஒப்படைப்பார்கள். அதனால், டாக்டர்களுக்கு தெரியாமல் சென்று விடலாம் என கூறியுள்ளனர்.

இதை கேட்ட மேகநாதன், உடனே தனது குழந்தையை ஆட்டோவில் தூக்கி போட்டு கொண்டு சென்றார். இதையறிந்த டாக்டர்கள் இதுகுறித்து ஆம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து சென்று ஆட்டோவை நடுவழியில் மடக்கி பிடித்து, குழந்தையை ஆம்பூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தது சேர்த்தார்.

இது குறித்து, ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News