செய்திகள்
குளித்தலையில் போலி லாட்டரி சீட்டு அச்சடித்த 6 பேர் கைது
குளித்தலையில் ஒரு வீட்டில் போலியாக லாட்டரி சீட்டு அச்சடித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார். அவரை தேடி வருகிறார்கள்.
குளித்தலை:
கரூர் மாவட்டம் குளித்தலை எழுநூற்று மங்கலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலியாக லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை செய்யப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு கோபிநாத் என்பவரின் வீட்டில் போலியாக லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட லேப்டாப், பிரிண்டர்கள் , அச்சு எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த லாட்டரி சீட்டுகளை அச்சடித்த கோபிநாத் மற்றும் நச்சனூரை சேர்ந்த மோகன், தனபால், ராஜீ உள்பட 6 பேரை கைது செய்தனர். தப்பியோடிய குமார் என்பவரை தேடி வருகின்றனர்.