செய்திகள்

கோத்தகிரியில் காட்டெருமைகள் தாக்கி கன்றுக்குட்டி பலி

Published On 2017-06-22 15:11 GMT   |   Update On 2017-06-22 15:11 GMT
கோத்தகிரியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்த கன்றுக்குட்டிகளை காட்டெருமைகள் தாக்கியது. இதில் கன்றுக்குட்டி பரிதாபமாக இறந்தது.
கோத்தகிரி:

கோத்தகிரி அருகே உள்ள ராயன் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சலாம் (வயது 34) விவசாயி. இவர் நேற்று காலை 7 மணிக்கு தனது மாடுகள் மற்றும் கன்று குட்டிகளை மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். கோத்தகிரி சி.எஸ்.ஐ குழந்தைகள் நல காப்பக வளாகத்தில் மேய்ந்து கொண்டிருந்த கன்று குட்டியை அங்கு வந்த காட்டெருமைகள் கூட்டம் ஒன்று சேர்ந்து பலமாக தாக்கியது. அதன் கொம்புகள் குத்தியதால் கன்று குட்டியின் வயிற்றுப்பகுதி கிழிந்து குடல் வெளியே வந்து தொங்கியது. இதனால் கன்றுக்குட்டி வலி தாங்க முடியாமல் சத்தம்போட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் அந்த காட்டெருமைகளை விரட்டி, கன்றுக் குட்டியை மீட்டனர்.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனக்காப்பாளர் முருகன் உட்பட வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது காட்டெருமைகள் கூட்டமாக வந்து தாக்கியதில் கன்றுகுட்டி உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கன்றுக்குட்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதே பகுதியில் புதைக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:– காட்டெருமை தாக்கி இறந்த கன்று குட்டி 3 வயது மதிக்கத்தக்க பெண் கன்று குட்டி ஆகும். இதில் பாதிக்கப்பட்ட அதன் உரிமையாளருக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Tags:    

Similar News