செய்திகள்
பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை
பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பழைய பர்மா நகரில் வசித்து வருபவர் கலையரசன். கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. அதையடுத்து இரவு அவர் குடும்பத்துடன் அருகில் உள்ள தந்தை வீட்டில் தூங்கினார்.
காலையில் வீட்டுக்கு திரும்பி வந்த போது பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 3½ பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை காணவில்லை.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.