செய்திகள்

வைகை அணை குடிநீர் திட்டத்தில் இருந்து தேனி நகருக்கு 2 மாதத்திற்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படும்

Published On 2017-05-24 12:30 GMT   |   Update On 2017-05-24 12:30 GMT
தேனி நகருக்காக வைகை அணையில் இருந்து குடிநீர் எடுக்கும் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில் இருந்து 2 மாதத்திற்குள் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மதிப்பீட்டு குழுவினர் தெரிவித்தனர்.
தேனி:

தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வடிகால் வாரியத் துறை, சமூக நலத்துறை, பொது சுகாதாரத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகள் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து 7 இடங்களில் மதிப்பீட்டு குழு தலைவர் நரசிம்மன் தலைமையில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் ராஜா, கனகராஜ், சாமி, சுதர்சனம், செல்வமோகன்தாஸ் பாண்டியன், பரமசிவம், பாஸ்கர், மனோன்மணி, ராஜேஷ்குமார், ஜெயந்திபத் மநாபன் ஆகியோர் கொண்ட குழுவினர் உடன் சென்றனர்.

இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மதிப்பீட்டு குழுவினர் ஆலோசனை நடத்தினர். அப்போது இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் வேலை உத்தரவு போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த ஆய்வு கூட்ட முடிவில் மதிப்பீட்டு குழு தலைவர் நரசிம்மன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் 15-வது சட்ட மன்ற பேரவை மதிப்பீட்டு குழு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தேனி மாவட்டத்தினை 2-வது மாவட்டமாக ஆய்வு செய்துள்ளோம். இந்த ஆய்வின் நோக்கம் அரசின் மூலம் நடைபெறக்கூடிய வளர்ச்சி திட்டப்பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது. அதில் உள்ள குறைபாடுகள் என்ன. அதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பதற்காக தான் இந்த ஆய்வுப்பணி.

இவற்றில் தேனி நகருக்காக வைகை அணையில் இருந்து குடிநீர் எடுக்கும் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில் இருந்து 2 மாதத்திற்குள் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மதிப்பீட்டு குழு தலைவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News