செய்திகள்

காஞ்சீபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

Published On 2017-05-11 10:29 GMT   |   Update On 2017-05-11 10:29 GMT
பருவமழை பொய்த்ததன் காரணமாக பாலாற்றில் ஏற்கனவே நீர்மட்டம் குறைந்து உள்ளது. தற்போது கடும் கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகளில் சிறிதளவு உள்ள நீரும் வெகுவேகமாக குறைந்து வருகிறது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் பெருநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது 51 வார்டுகளை கொண்டுள்ளது. தினமும் 20 லட்சம் மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பாலாற்றில் 3 கிணறுகள், இரண்டு தரைவழி கிணறுகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் அளிக்கப்படுகிறது.

இதுதவிர 10 போர்வெல்கள் மூலமும் குடிநீர் பெறப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. மேலும் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட சிறுமின்விசை பம்புகள் அமைக்கப்பட்டு அப்பகுதியிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றின் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பருவமழை பொய்த்ததன் காரணமாக பாலாற்றில் ஏற்கனவே நீர்மட்டம் குறைந்து உள்ளது. தற்போது கடும் கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகளில் சிறிதளவு உள்ள நீரும் வெகுவேகமாக குறைந்து வருகிறது.

இதனால் பொது மக்களுக்கு வினியோகம் செய்யும் குடிநீரின் அளவு கடந்த சில நாட்களாக நாள்ஒன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர்கள் குறைவாக சப்ளை செய்யப்படுகிறது.

எனவே நாளுக்குநாள் கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில் குடிநீர் சப்ளையில் பெரும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் காஞ்சீபுரம் நகரின் பல பகுதிகளில் பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.
Tags:    

Similar News