தர்மபுரி அருகே பஸ் மீது மினிலாரி மோதி பெண் பலி: 4 பேர் படுகாயம்
தர்மபுரி:
தர்மபுரியில் இருந்து தனியார் பஸ் இன்று காலை 8.30 மணிக்கு அரூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் தர்மபுரி அருகே டீக்கடை பெஞ்ச் பழைய மாரியம்மன் கோவில் அருகே சென்றது. அப்போது அந்த வழியாக ஒரு மினிலாரி எதிரே வந்தது. இந்த லாரியை கோவிந்தராஜ் என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சும், மினிலாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மினிலாரியில் வந்த நடுப்பட்டியைச் சேர்ந்த பழனியம்மாள் (38) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் லாரியில் வந்த மார்க்கண்டேயன், பெருமாள், சின்னசாமி, மணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் வந்த பயணிகளும் சிலர் லேசான காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பழனியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.