செய்திகள்

தமிழகத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக சூறைக்காற்று வீசும்: வானிலை மையம்

Published On 2017-04-28 05:39 GMT   |   Update On 2017-04-28 05:39 GMT
தமிழகத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக காற்றின் ஈரப்பதம் அனைத்தும் உறிஞ்சப்பட்டு சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னே இந்த ஆண்டு வெயில் கொளுத்த தொடங்கியது.

அக்னி நட்சத்திரத்துக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பகல் நேரத்தில் அனல்காற்று வீசுகிறது.

வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். சென்னை மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

அதிக வெப்பத்தின் காரணமாக குறிப்பிட்ட இடத்தில் உள்ள காற்றின் ஈரப்பதம் அனைத்தும் உறிஞ்சப்படும். அப்போது வேறு பகுதியில் இருந்து அந்தப் பகுதிக்கு வரும் காற்றின் காரணமாக சூறைக்காற்று வீசக்கூடும். சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யவும் வாய்ப்புகள் உள்ளது.


நேற்றைய நிலவரப்படி வால்பாறை, பாபநாசம், ராசிபுரம், கொடைக்கானல், நிலக்கோட்டை ஆகிய இடங்களில் 10 மி.மீ. மழை பெய்துள்ளது.

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நேற்று கரூர் பரமத்தியில் 108 டிகிரி வெயிலும், திருத்தணியில் 107 டிகிரி வெயிலும், வேலூர், திருப்பத்தூர், திருச்சி, மதுரையில் 106 டிகிரி வெயிலும், சேலம், பாளையங்கோட்டையில் 105 டிகிரி வெயிலும், கடலூரில் 104 டிகிரி வெயிலும், நாகை, கோவை, சென்னையில் 102 டிகிரி வெயிலும் கொளுத்தியது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News