செய்திகள்

சித்திரை திருவிழா கூட்டத்தில் மோதல்: விவசாயியை தாக்கிய எல்.ஐ.சி. ஏஜெண்ட் கைது

Published On 2017-04-27 14:51 GMT   |   Update On 2017-04-27 14:51 GMT
சித்திரை திருவிழாவை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் விவசாயியை தாக்கிய எல்.ஐ.சி. ஏஜெண்ட்டை போலீசார் கைது செய்தனர்.

குன்னம்:

பெரம்பலூர் கைகளத்தூர் நெற்குனத்தை சேர்ந்தவர் வரதராஜன்.விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவர் எல்.ஐ.சி ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் நெற்குனத்தில் உள்ள பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வரதராஜனும், சுப்புராசும் கலந்து கொண்டனர். அப்போது மது போதையில் சுப்புராஜ் அங்கு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை வரதராஜன் தட்டிக்கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுப்புராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வைத்து இருந்த இரும்பு கம்பியால் வரதராஜனை தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் வரதராஜன் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கைகளத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து சுப்புராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News