செய்திகள்

திருச்சி அருகே புதுப்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2017-04-26 12:13 GMT   |   Update On 2017-04-26 12:13 GMT
திருச்சி அருகே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் மன்சூர் சேட். இவரது மனைவி யாஸ்மின்பானு (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதம் ஆகிறது. இந்நிலையில் 2 முறை கர்ப்பமான யாஸ்மினுக்கு கருகலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை அவரது மாமியார், மாமனார் அடிக்கடி சத்தம் போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த யாஸ்மின்பானு எடமலைப் பட்டிபுதூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் யாஸ்மின்பானு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News