செய்திகள்

நெகமம் பகுதி வறண்ட பூமியாக மாறும் அவலம்- விவசாயிகள், பொதுமக்கள் வேதனை

Published On 2017-04-22 10:55 GMT   |   Update On 2017-04-22 10:55 GMT
நெகமம் மற்றும அதன் சுற்று வட்டார கிராமங்கள் வறண்ட பகுதியாக மாறி வருவதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

நெகமம்:

நெகமம் மற்றும அதன் சுற்று வட்டார கிராமங்கள் வறண்ட பகுதியாக மாறி வருவதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

விவசாயத்தில் வளம் கொழிக்கும் பகுதியாகவும், வருவாயில் செழிப்பாகவும் காணப்பட்ட நெகமம் பகுதி தற்போது வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது.

இந்தப்பகுதியில் உள்ள விவசாயிகள் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரையும், மழை நீரையும் நம்பியே விவசாயம் செய்கிறார்கள். இதன் காரணமாக எப்போதுமே செழிப்பாக காணப்பட்ட நெகமம் பகுதி தற்போது பாசனத்திற்கு கூட தண்ணீர் இல்லாமல் வறண்ட பகுதியாக காட்சி அளிக்கிறது.

குளம், குட்டை, தடுப்பணை, ஓடை, கால்வாய் என்று அனைத்து நீர் நிலைகளும் தண்ணீர் இல்லாமல் பாறைகளாகவும், மண் திட்டுகளாகவும் மாறி விட்டன.கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீரை அதிகரிக்கவும், கால்நடைகளுக்கு உதவுவதற்காக அமைத்த பண்ணை குட்டைகளும் வறண்டு காணப்படுகின்றன. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் திணறு கின்றனர்.

கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய தென் மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவமழையும் மொய்த்து போனது. கோடை மளையும் பெய்யவில்லை. மழை ஏமாற்றியதன் காரணமாக நெகமம் அதன் சுற்ற வட்டார பகுதிகளில் மானாவாரியாக பயிரிடப்பட்டு இருந்த ஏராளமான செடிகள், பயிர்கள் கருகி விட்டன. தென்னை மரங்கள் தண்ணீர் இன்றி காய்த்து வருகின்றன.மேலும் வறட்சியை தாக்கு பிடித்து உள்ள பயிர்களையும் நோய் தாக்கி கருகி வருகின்றன.

இது மட்டுமின்றி ஆயக்கட்டு பாசனத்தில் சேராத பகுதிகளில் விவசாயிகளின் நிலைமை தண்ணீர் இல்லாததால் படுமோசமாக உள்ளது.கால்நடைகளுக்கும் கூட தண்ணீர் கிடைப்பது பெரும் சிரமம்.

நீர் நிலைகள் வறண்டு போனதால் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடிவது இல்லை. இதனால் பல கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன் எங்கு தண்ணீர் கிடைக்கும் என்று அலைந்து திரிந்து வருகிறார்கள்.

மழை இல்லாததால் கடும் வெயில் கொளுத்துகிறது.இதனால் ஏற்பட்ட கடும் வறட்சியினால் நெகமம் பகுதி வறண்ட பூமியாக மாறி வருகிறது. இதன் காரணமாக போது மக்கள், விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் எப்போது மழை பெய்யும் என்று வானம் பார்த்த பூமியாக காத்திருக்கிறார்கள்.

தற்போது நிலவும் கடும் வெயிலினால் பகல் நேரங்களில் மக்கள் நணமாட்டமும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக நெகமம் பகுதியில் விவசியம் மட்டுமின்றி அனைத்து வியாபாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள், பொது மக்கள் மழை வேண்டி ஒவ்வொரு பகுதியில் விநாயகர் கோவிலில் உள்ள விநாயகரை முழு கொள்ளளவு தண்ணீரில் நனைத்து வழிபட்டும் வருகின்றனர்.

Similar News