செய்திகள்

ராசிபுரம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த 10-ம் வகுப்பு மாணவி

Published On 2017-04-17 11:01 GMT   |   Update On 2017-04-17 11:01 GMT
ராசிபுரம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த 10-ம் வகுப்பு மாணவியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

ராசிபுரம்:

ராசிபுரம் தாலுகா, பட்டணம் முனியப்பம் பாளையம் அருகேயுள்ள கைலாசம்பாளையம் வெள்ளக்குட்டையைச் சேர்ந்தவர் மணியரசு. இவர் விவசாயிகளின் தோட்டத்தில் பூச்சி மருந்து தெளிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கோபிகா (வயது 17). இவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தையல் பயிற்சிக்கு சென்று வந்தார்.

கடந்த சனிக்கிழமை தையல் பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து சென்ற கோபிகா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையொட்டி அவரது பெற்றோர் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கோபிகா மாயமானது தொடர்பாக புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மாணவி கோபிகா பட்டணம் முனியப்பம்பாளையம் பகுதியில் உள்ள மிளகாய் பொடியார் தோட்டத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 75 அடி ஆளமுள்ள விவசாய கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார். இதை தண்ணீர் எடுத்து விடுவதற்காக அங்கு சென்ற விவசாயி ராஜேந்திரனின் மகன் விஜயகுமார் பார்த்துள்ளார்.

இதுகுறித்து அவர்கள் நாமகிரிப்பேட்டை போலீஸ் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மாணவி கோபிகாவின் சடலத்தை கிணற்றில் இருந்து கயிறு மூலம் மீட்டனர்.

சம்பவ இடத்திற்கு நாமகிரி பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மாணவி கோபிகா மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாக தெரிய வந்துள்ளது.

கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி கோபிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News