செய்திகள்
பலியான மாணவர் தனுஷ்

மணலி அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி

Published On 2017-04-17 03:32 GMT   |   Update On 2017-04-17 03:32 GMT
மணலி அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இதுபற்றி மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவொற்றியூர்:

மணலி சின்னசேக்காடு குமரி அனந்தன் தெருவில் வசிப்பவர் பாலு. இவருடைய மகன் தனசேகரன் என்ற தனுஷ்(வயது 15). மணலியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த இவர், சமீபத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி முடித்து உள்ளார்.

சம்பவத்தன்று இவர், தனது நண்பர்கள் 2 பேருடன் மணலி கொசப்பூர் அருகே உள்ள ஏரியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது தனுஷ், ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். நீரில் தத்தளித்த அவரை, நண்பர்களால் காப்பாற்ற முடியவில்லை.

இதனால் ஏரியில் தத்தளித்த மாணவர் தனுஷ், சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மணலி தீயணைப்பு நிலைய வீரர்கள், ஏரியில் மூழ்கி பலியான மாணவர் தனுஷின் உடலை மீட்டனர்.

மாணவரின் உடலை கைப்பற்றிய மணலி போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News