செய்திகள்

காயல்பட்டினத்தில் ஆட்டோ திருடிய பிரபல கொள்ளையன் சிக்கினான்

Published On 2017-04-01 15:14 GMT   |   Update On 2017-04-01 15:14 GMT
காயல்பட்டினத்தில் ஆட்டோ திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். கைதான கொள்ளையன் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் உள்ளன.
ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முகம்மது கவுது சாகுல் அமீது (வயது 52). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இவர் தனது ஆட்டோவை மங்களவாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரிடம் தினசரி வாடகைக்கு விட்டிருந்தார்.

கடந்த 28-ந்தேதி இரவு ஜாபர் சாதிக், ஆட்டோவை கூலக்கடை பஜாரில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடை வாசலில் படுத்திருந்தார். நள்ளிரவில் விழித்து பார்த்த போது ஆட்டோவை மாயமாகி இருப்பதை கண்டு ஜாபர் சாதிக் அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் ஆதிலெட்சுமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் ஓடக்கரை அருகே ஆட்டோவில் வந்த  ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவை சேர்ந்த சுலைமான் (37) என்பதும், தற்போது இவர் மேலப்பாளையத்தில் வசித்து வருபதும், முகம்மது கவுது சாகுல் அமீது ஆட்டோவை திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் போலீசார் அவரிடம் இருந்த ஆட்டோவை பறிமுதல் செய்து  சுலைமானை கைது செய்தனர். கைதான சுலைமான் மீது நெல்லை, மேலப்பாளையம், நாகர்கோவில் வடசேரி ஆகிய போலீஸ் நிலையங்களில் ஏராளமான திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News