செய்திகள்

மன்னார்குடி அருகே கட்டையால் தாக்கி விவசாயி கொலை: தொழிலாளி போலீசில் சரண்

Published On 2017-03-28 12:51 GMT   |   Update On 2017-03-28 12:51 GMT
மன்னார்குடி அருகே முன்விரோதத்தில் விவசாயியை கட்டையால் தாக்கியதில் இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே உள்ள மேலநத்தம் மேலகுடியை சேர்ந்தவர் சைமன் (வயது 55) விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். அதே ஊர் தோப்பு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (50). இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் ஒருவரை ஒருவர் பார்க்கும் போதெல்லாம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று தோப்புபகுதியில் சைமன் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த அன்பழகன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டதாக கூறப்படுகிறது.

ஆத்திரம் அடைந்த அன்பழகன் அருகில் இருந்த கட்டையை எடுத்து சைமனை தொடர்ந்து தாக்கியுள்ளார். இதில் சைமன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை கண்ட சிலர் அங்கு ஓடிவந்தனர். அவர்களை பார்த்தவுடன் அன்பழகன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து திருமக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சைமனின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு முழுவதும் அன்பழகனை தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை திருமக்கோட்டை போலீசில் அன்பழகன் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News