செய்திகள்
மோட்டார் சைக்கிள் குறுக்கே நாய் வந்ததால் விபத்து: 2 வாலிபர்கள் பலி
கோவை அருகே மோட்டார் சைக்கிள் குறுக்கே நாய் வந்ததால் விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள வீரபாண்டியை சேர்ந்தவர் பூபதி (வயது 31). கட்டிட தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் வீட்டுக்கு செல்வதற்காக காமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கவுதம் என்பவரது மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றார். மோட்டார் சைக்கிள் வீரபாண்டி- காளியாபாளையம் ரோட்டில் சென்ற போது திடீரென நாய் ரோட்டை கடந்து சென்றது.
நாய் மீது மோதாமல் இருக்க கவுதம் பிரேக் போட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது நிலை தடுமாறி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பூபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த கவுதம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.