ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் அமோக வெற்றிபெற பாடுபடுவோம்: அமைச்சர் சூளுரை
சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. (அம்மா) அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முக்கிய நிர்வாகிகளுடன் 40-வது வார்டுக்குட்பட்ட சிவன்நகர் பகுதியில் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் அவர் பேசும்போது, தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு இடைத் தேர்தலில் டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்து வெற்றி பெற செய்து அம்மா சொன்னதுபோல் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது என்பதை நிரூபிக்க வேண்டும். தேர்தலில் அமோக வெற்றி பெற்று எதிரிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் சிவன்நகரை சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று தொப்பி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருடன் சாத்தூர் எம்.எல்.ஏ. எஸ்.வி.சுப்பிரமணி, ஸ்ரீவில்லி புத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வசுப்பிர மணிய ராஜா, பாஸ்கர், முத்து ராஜ், பிரபாஸ், வட்ட செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் உடன் சென்று ஆதரவு திரட்டினர்.