செய்திகள்

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

Published On 2017-03-23 17:29 GMT   |   Update On 2017-03-23 17:29 GMT
பெரம்பலூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர்:

2016-17-ம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தன. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மோகன் போட்டியை தொடங்கி வைத்தார்.

தடகள போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் ஒரே நேரத்தில் தனித்தனியாக நடத்தப்பட்டன. 14 வயது, 17 வயது, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடந்தன. மேலும் கோ-கோ, கைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, எறிபந்து உள்ளிட்ட குழு போட்டிகளும் நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை சேர்ந்த 650 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டி நடுவர்களாக செயல்பட்டனர்.

பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

Similar News