செய்திகள்

அனைத்து கோப்புகளையும் கவர்னரின் அனுமதிக்கு அனுப்ப தேவையில்லை: நாராயணசாமி அறிவுரை

Published On 2017-03-23 10:08 GMT   |   Update On 2017-03-23 10:08 GMT
13 வகையான அம்சங்கள் தவிர அனைத்து கோப்புகளையும் கவர்னர் அனுமதிக்கு அனுப்பத் தேவையில்லை என்று நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி:

புதுவை அரசு பொது நிர்வாகத்துறை சார்பில் அரசுத்துறை கண்காணிப்பாளர்கள், சார்பு செயலர்கள் பங்கேற்ற சிறந்த நிர்வாகம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

சிறிய மாநிலமான புதுவையில் வெளிப்படையான நிர்வாகம், நல்லாட்சி தருவது எளிது. ஆனால் இங்கு அனைத்து நேர் மாறாக நடைபெறுகிறது. கோப்புகளை விரைவாக பரிசீலித்து அனுப்புவதற்கு பதில் குறிப்பு தான் எழுதி அனுப்பும் நிலை உள்ளது. முதலில் பணி விதிகள், யூனியன் பிரதேசத்துக்கான வழி காட்டுதல்கள், அரசியல் சட்டம் போன்றவை குறித்து அதிகாரிகள் நன்றாக படித்தறிய வேண்டும்.

எந்தெந்த கோப்புகளை கவர்னருக்கு அனுப்பலாம், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், செயலாளர்கள் வரை பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்பதை தெளிவாக அறிய வேண்டும். 13 வகையான அம்சங்கள் தவிர அனைத்து கோப்புகளையும் கவர்னர் அனுமதிக்கு அனுப்பத் தேவையில்லை.

ஆட்சியாளர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். அவர்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். பதில் கூற கடமைப்பட்டுள்ளோம். குறிப்பாக அரசு அதிகாரிகளை சட்டத்தை மீறி செய்யும்படி நாங்கள் கூற மாட்டோம். சட்டத்தை மீறாமல், மக்கள் நலனுக்காக அவற்றை வளைத்து அதிகாரிகள் செயல்படலாம்.

புதுவையில் 12½ லட்சம் பேர் வசிக்கின்றனர். மொத்தம் ரூ.6625 கோடிக்கு பட்ஜெட் போடப்படுகிறது. மாநிலத்துக்கு மொத்த வருவாய் ரூ.4 ஆயிரம் கோடி மட்டுமே வருகிறது. ரூ.1000 கோடி கடன் வாங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் திட்டமல்லா மானிய நிதி ரூ.2150 கோடி தராமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது.

அரசு நலத்திட்டங்களான முதியோர் ஓய்வூதியம், இலவச அரிசி, போன்றவை காலத்தோடு வழங்க முடியாத நிலை உள்ளது. அமைச்சர்கள் பலமணி நேரம் உழைத்தாலும், அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லையென்றால் சிறந்த நிர்வாகத்தை தர முடியாது.

அதிகாரிகள் மீது பழி வாங்கும் போக்கோடு அரசு செயல்படாது. நானும், அமைச்சர்களும் உங்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்வோம். அரசு நிர்வாகத்தின் தூண்களாக விளங்கும் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

Similar News