தி.நகரில் தனியார் நிறுவன பெண் அதிகாரியை கத்தியால் குத்திய வாலிபர்
சென்னை:
கொல்கத்தாவை சேர்ந்தவர் சுஜிசுபிதா. இவர் மீஞ்சூர் அடுத்த வெள்ளிவாயல் சாவடியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். தி.நகரில் உள்ள ஹாஸ்டலில் தங்கி உள்ள சுஜிசுபிதா தினமும் அங்குள்ள பகவான் தெருவில் கம்பெனி பஸ்சில் ஏறி வேலைக்கு செல்வார்.
இன்று காலை 7 மணிக்கு கம்பெனி பஸ்சுக்காக சுஜிஅபிதா நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் வாக்குவாதம் செய்தார். திடீரென்று கத்தியால் சுஜிஅபிதா வயிற்றில் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். சுஜி அபிதாவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பிடிபட்ட வாலிபரை மாம்பலம் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இதில் அந்த வாலிபர் சிவகாசியை சேர்ந்த ரகுநாதன் என்பதும், சுஜிஅபிதா பணிபுரியும் கார் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
சுஜிஅபிதா செல்லும் கம்பெனி பஸ்சில்தான் ரகுநாதனும் செல்வார். அப்போது ஒரு முறை சுஜியை ரகுநாதன் இடித்து விட்டார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதன் பின் ரகுநாதன் அமரும் இடம் அருகே சுஜிஅபிதா அமராமல் வேறு இடத்தில் அமர்ந்தார். ஆனால் ஆத்திரம் அடைந்த ரகுநாதன் மீண்டும் தகராறு செய்து உள்ளார்.
இதுபற்றி சுஜிஅபிதா அதே நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் தனது தந்தையிடம் கூறினார். அவர் அளித்த புகாரால் ரகுநாதனை வேலையில் இருந்து நீக்கினர்.
அதன்பின்னர் ரகுநாதன் பல இடங்களில் வேலை தேயும் கிடைக்கவில்லை. இதனால் தனது வேலை பறிபோனதற்கு காரணமான சுஜிஅபிதாவை கத்தியால் குத்தி உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.