செய்திகள்

சுசீந்திரம் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

Published On 2017-03-20 13:08 GMT   |   Update On 2017-03-20 13:08 GMT
சுசீந்திரம் அருகே அரசு பஸ் டிரைவரை கல்லால் தாக்கிய 2 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
நாகர்கோவில்:

சுசீந்திரம் அக்கரை பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 51). இவர் நாகர்கோவில் செட்டிகுளம் பணிமனையில் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று நாகர்கோவிலில் இருந்து அம்பலபதி நோக்கி பஸ்சை ஓட்டிச்சென்றார். அந்த பஸ்சில் கண்டக்டராக வரதராஜன் இருந்தார்.

அந்த பஸ் தெற்குதேரி விளை பகுதியில் சென்ற போது புத்தளம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35), கண்ணன் (42) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தனர். குறுகலான பகுதியில் பஸ்சும் மோட்டார் சைக்கிளும் வந்த போது நிலைதடுமாறி ராஜ்குமார், கண்ணன் ஆகியோர் கீழே விழுந்து விட்டனர்.

இதனால் அவர்கள் பஸ் டிரைவர் கலைச்செல்வனிடம் தகராறு செய்தனர். மேலும் அவரை கல்லால் தாக்கினார்கள். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கன்னியாகுமரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாம்சன், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் காந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அரசு பஸ் டிரைவரை தாக்கியதாக ராஜ்குமார், கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Similar News