தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி மாயம்
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் கோட்டைமேடு திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் சக்கரவரத்தி, கூலித்தொழிலாளி. இவரது மகள் விசித்ரா (வயது18) இவர் முதலியார்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
தற்போது பிளஸ்-2 தேர்வு நடந்து வரும் நிலையில் சக்கரவர்த்தி தினமும் தனது மகளை தேர்வு மையத்துக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று விடுவது வழக்கம். அதுபோல சம்பவத்தன்று முதலியார்பேட்டையில் உள்ள தேர்வு மையத்துக்கு விசித்ராவை மோட்டார் சைக்கிளில் சக்கரவர்த்தி அழைத்து சென்றார். பின்னர் சக்கரவர்த்தி வீடு திரும்பினார்.
மதியம் 1 மணிக்கு மகளை அழைத்துவர சக்கரவர்த்தி பள்ளிக்கு சென்றார். அவர் வெகுநேரம் காத்திருந்தும் தேர்வு மையத்தில் இருந்து விசித்ரா வரவில்லை. பின்னர் விசாரித்த போது விசித்ரா தேர்வு எழுதிவிட்டு முன்னதாகவே சென்று விட்டது தெரியவந்தது. ஆனால் விசித்ரா வீட்டுக்கும் செல்லவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் எங்கும் விசித்ரா இல்லை. இதையடுத்து சக்கரவர்த்தி தனது மகள் மாயமானது குறித்து முதலியார்பேட்டை போலிசீல் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.