செய்திகள்

இந்திய மாணவர்கள் சம்மேளனம் வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

Published On 2017-03-02 11:13 GMT   |   Update On 2017-03-02 11:13 GMT
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு கேட்டு இந்திய மாணவர்கள் சம்மேளனம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

இந்திய மாணவர்கள் சம்மேளனத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரினா கடற்கரையில், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தினோம். இந்த போராட்டத்தில் எங்கள் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் எங்கள் அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். எனவே, படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கவும், இந்த சம்பவம் குறித்து ஐகோர்ட்டில் பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைத்தும் விசாரிக்க உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

Similar News