கிருமாம்பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்ற மீனவர் கார் மோதி பலி
பாகூர்:
கடலூர் முதுநகர் ராசாப்பேட்டையை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 50), மீனவர். இவர் சம்பவத்தன்று கிருமாம்பாக்கம் அருகே முள்ளோடைக்கு வந்திருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் கலியபெருமாள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை காரை ஓட்டி வந்த மதுரையை சேர்ந்த சித்தார்த் என்பவர் அந்த காரிலேயே கலியபெருமாளை மீட்டு சென்று கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு சிகிச்சை பெற்ற கலியபெருமாள் பின்னர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் கலியபெருமாளுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. அவரை மீண்டும் கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தினர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி கலியபெருமாள் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான கலியபெருமாளுக்கு ஆராயி என்ற மனைவியும், 2 மகள்களும் , ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.