செய்திகள்

கிருமாம்பாக்கம் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2017-02-27 10:09 GMT   |   Update On 2017-02-27 10:09 GMT
மனைவிக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்ததால் விரக்தியில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்:

கிருமாம்பாக்கம் அருகே மதிகிருஷ்ணாபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் கருணாகரன் (வயது30). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி புட்டலாய். இவருக்கு அடுத்தடுத்து பிறந்த 3 குழந்தைகளும் பெண் குழந்தைகளாக பிறந்தன. இதனால் விரக்தி அடைந்த கருணாகரன் அடிக்கடி மனைவியிடம் இதுபற்றி கேட்டு தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு புட்டலாய் அருகில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஏற்கனவே பெண் குழந்தைகள் பிறந்ததால் விரக்தியாக இருந்த கருணாகரன் மனைவி கோபித்து சென்றதால் மேலும் மனவேதனை அடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கருணாகரன் வீட்டில் ரேடியோவை அதிகமாக சத்தமாக வைத்து விட்டு மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

நள்ளிரவில் ரேடியோவில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கருணாகரன் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கருணாகரன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து புட்டலாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் தூக்கில் இருந்து கருணாகரனை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கருணாகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News