செய்திகள்

அண்ணா அறிவாலயம் முன்பு போக்குவரத்து சிக்னல் அமைக்க கோரி தி.மு.க. வழக்கு

Published On 2017-02-24 10:33 GMT   |   Update On 2017-02-24 10:33 GMT
அண்ணா அறிவாலயம் முன்பு போக்குவரத்து சிக்னல் அமைக்க கோரி தி.மு.க. தொடர்ந்த வழக்கில் கூடுதல் போலீஸ் கமி‌ஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க.வின் தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை அருகேயுள்ளது. அண்ணா அறிவாலயத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வந்து செல்கின்றனர்.

தொண்டர்கள் வாகனத்தில் சைதாப்பேட்டையில் இருந்து அறிவாலயம் வரும் போது, காமராஜர் அரங்கம் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் அறிவாலயத்துக்கு திரும்பி வர வேண்டியதுள்ளது.

இதனால், அறிவாலயம் முன்பே, போக்குவரத்து சிக்னலுடன், ஒரு பாதையை ஏற்படுத்தி தரவேண்டும் என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமி‌ஷனரிடம் கடந்த ஆண்டு ஜூலை 7-ந்தேதி கோரிக்கை மனு கொடுத்தோம்.

இந்த போக்குவரத்து சிக்னல் அமைப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியில் இருந்து செலவு செய்வதாகவும் கூறியிருந்தோம். ஆனால், இதுநாள் வரை எங்களது கோரிக்கையை போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் பரிசீலிக்காமல் உள்ளார்.

எனவே, எங்களது கோரிக்கையை பரிசீலித்து, அறிவாலயம் முன்பு ஒரு பாதையை உருவாக்கி, போக்குவரத்து சிக்னலையும் அமைக்கும்படி கூடுதல் போலீஸ் கமி‌ஷனருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி போக்குவரத்து துறை கூடுதல் போலீஸ் கமி‌ஷனருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

Similar News