செய்திகள்
குடவாசல் அருகே லாரிகள் நேருக்குநேர் மோதல்: டிரைவர் உள்பட 3 பேர் காயம்
குடவாசல் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
குடவாசல்:
திருவாரூரில் இருந்து கும்பகோணம் நோக்கி ஒரு லாரி சென்றது. இதனை சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அண்ணாமலை மகன் சக்தி (25) ஓட்டி சென்றார். அப்போது எதிரே சென்னை ஆண்டியப்பன் தெரு ராஜேந்திரன் மகன் ராஜா (23) ஓட்டி வந்த லாரி வந்தது. குடவாசல் அருகே உள்ள வடகண்டம் வெட்டாற்று பாலம் அருகே 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இதில் லாரி டிரைவர்கள் சக்தி, ராஜா, கிளீனர் தமிழ் அரசு ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்களின் தலை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து குடவாசல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.