செய்திகள்

சின்ன வீராம்பட்டினத்தில் ஓட்டல் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2017-02-16 12:18 GMT   |   Update On 2017-02-16 12:18 GMT
சின்ன வீராம்பட்டினத்தில் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் ஓட்டல் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்:

புதுவை அரியாங்குப்பம் அருகே சின்னவீராம் பட்டினம் அருள் வீதியை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 40). இவருக்கு வள்ளி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அமல்ராஜ் அங்குள்ள தனியார் ஓட்டலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

குடிப்பழக்கம் உள்ள அமல்ராஜ் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால் குடும்பத்தை காப்பாற்ற வள்ளி தனியார் டுட்டோரியலில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் காலை அமல்ராஜ் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி வள்ளி கண்டித்தார். பின்னர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு வள்ளி வேலைக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் மனைவி திட்டியதால் வேதனை அடைந்த அமல்ராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கு கொடி கட்டும் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கினார்.

அமல்ராஜ் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை பார்த்து பக்கத்து வீட்டுக்காரர் அரியாங்குப்பம் போலீசாருக்கும், வள்ளிக்கும் தகவல் தெரிவித்தார்.

போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருமாம்பாக்கம் அருகே கந்தன்பேட் பால்வாடி தெருவை சேர்ந்தவர் சரவணன் (42). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சூப்பர் வைசராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள உள்ளனர்.

இதற்கிடையே சரவணன் தீராத தலைவலியால் அவதி அடைந்து வந்தார். இதற்காக அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த தலைவலி பிரச்சினையால் அவர் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சரவணன் நேற்று நள்ளிரவு தனது வீட்டு முன்புள்ள பூவரச மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News